ஜெனரல் பொன்சேகாவிற்கு ஆதரவளிக்கும் தொழிற்சங்கவாதிகள் சந்திப்பு
இலங்கையில், நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையை இரத்துச் செய்வதற்காகப் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவை வெற்றிபெறச் செய்யும் வகையிலான தொழிற்சங்கப் பிரதிநிதிகள் சந்திப்பொன்று நேற்றுக் கொழும்பில் நடைபெற்றது.
இந்தச் சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கை எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக பெயரிடப்பட்டுள்ள ஜெனரல் சரத் பொன்சேகா கருத்துத் தெரிவித்தார்.
யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் நாடு முன்னோக்கிச் செல்ல வேண்டுமெனக் குறிப்பிட்ட ஜெனரல் சரத் பொன்சேக்கா, யுத்த வெற்றியைக் கொண்டுவந்தது யார் என்பதை அனைவரும் அறிவார்கள் எனவும் கூறினார்.
யுத்த வெற்றிக்காக மிகவும் அர்ப்பணிப்புடன் பங்காற்றியதுடன், தமது 40 வருட அனுபவத்தையும் அதற்காகப் பயன்படுத்தியதாக ஜெனரல் சரத் பொன்சேகா இதன்போது தெரிவித்தார்.
ஜனநாயகம் இல்லாமல் போவதற்கும், அனைத்தையும் ஒடுக்குவதற்கும், தொழிற்சங்கங்களை ஒடுக்குவதற்கும் ஏதுவாக, நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையே அடிப்படையாக அமைந்துள்ளதென அவர் குறிப்பிட்டார்.
நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இரத்துச் செய்வதற்குத் தாம் கட்டுப்பட்டுள்ளதாகத் தெரிவித்த ஜெனரல் சரத் பொன்சேகா, யுத்தத்தை வெற்றிகொண்டு ஏழு மாதங்கள் கடந்தும் அதுதொடர்பாக இன்னும் பதாகைகளை நிறுவுகின்றனர் எனக் கூறினார்.
எனினும் அதற்கப்பால் நாட்டிற்குத் தேவையான சமாதானம், சட்டம் மற்றும் ஒழுங்கு, அபிவிருத்தி என்பவற்றைக் கொண்டுவர எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
அரசியல் கட்சிகளுடன் இணைந்து மேற்கொள்ளவுள்ள தமது செயற்பாடுகளின் மூலம், எதிர்காலச் சந்ததியினரின் பாதுகாப்பை உறுதிசெய்து, சிறந்த கல்வியை வழங்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்குவதற்கு முன்னுரிமை வழங்கப்படும் என ஜெனரல் சரத் பொன்சேகா மேலும் அங்கு கருத்துத் தெரிவித்தார்.
0 Response to "ஜெனரல் பொன்சேகாவிற்கு ஆதரவளிக்கும் தொழிற்சங்கவாதிகள் சந்திப்பு"
แสดงความคิดเห็น