தெலுங்கானா முடிவை சிதம்பரம் எப்படி அறிவிக்கலாம்?- பாஜக
டெல்லி: தெலுங்கானா தனி மாநிலம் குறித்து நாடாளுமன்றத்தில் ஆலோசிக்காமல் எப்படி இதுபற்றி அறிவிக்கலாம் என மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தை குற்றம்சாட்டி பா.ஜ.க உறுப்பினர்கள் ராஜ்யசபாவில் அமளியில் ஈடுபட்டனர்.
இன்று ராஜ்யசபா அவை நடவடிக்கை துவங்கியவுடன் பா.ஜ தலைவர் வெங்கைய நாயுடு இப்பிரச்னையை எழுப்பினார். 'உள்துறை அமைச்சர் நேற்று அவையில் தான் இருந்தார். தனி தெலுங்கானா மாநிலம் அமைப்பது குறித்து அவையில் ஒருமித்த கருத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.
அதற்கு பதிலாக வெளியே சென்று இதுதொடர்பான அறிவிப்பை வெளியி்ட்டுள்ளார். இதில் உள்நோக்கம் இருக்கிறது' என்றார். காங்கிரஸ் உறுப்பினர்களும், பா.ஜ உறுப்பினர்களும் பதிலுக்கு கோஷம் எழுப்பிக்கொண்டிருந்தனர். இதனால் சிறிது நேரம் அவை அமளியானது.
அரசியல் சாசன சட்டப்படி எதையும் நாடாளுமன்றத்தில விவாதித்து தான் முடிவெடுப்போம். இது உறுப்பினர்களுக்கு தெரியாதா. ஏன் கூச்சலிடுகிறீர்கள் என அவைத் தலைவர் ஹமீது அன்சாரி சமாதானப்படுத்தினார்.
அப்போது, 'இது தெரியாதா எங்களுக்கு. அவையில் விவாதித்த பின் அறிவித்தால் அது ஒருமித்த கருத்து. ப.சிதம்பரம் அறிவித்த பின் விவாதித்தால் அது காங்கிரஸ் கருத்து என உறுப்பினர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டனர். இந்த அமளியால் அவை 15 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டது.
0 Response to "தெலுங்கானா முடிவை சிதம்பரம் எப்படி அறிவிக்கலாம்?- பாஜக"
แสดงความคิดเห็น