ஜனாதிபதித் தேர்தல் குறித்து ததேகூ திங்களன்று மீண்டும் ஆராயும்
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும் கூடி ஆராயவிருக்கின்றனர்.
நேற்று மாதிவெலையிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வீடமைப்புத் திட்டத்தில், கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் இது தொடர்பாகக் கூடி ஆராயப்பட்ட போதிலும் எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை.
இத்தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தெடர்பாகவும் தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் கடந்த புதன்கிழமை இரவு நடைபெற்ற சந்திப்பு தொடர்பாகவும், இச்சந்திப்பில் சாதகமான முடிவுகள் எட்டப்படவில்லை என்பது குறித்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கிக் கூறினார்.
ஜனாதிபதி தேர்தல் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் சரத் பொன்சேகா ஆகியோரைச் சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கருத்தும் அங்கு முன்வைக்கப்பட்டது.
இதற்கிடையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேம்ஜயந்த, ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக சந்தித்துப் பேசுவதற்கு நேரம் ஒதுக்கித் தருமாறு, தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தனித்தனியாக அனுப்பியுள்ள கடிதம் குறித்து இங்கு ஆராயப்பட்ட போதிலும், அப்படி தனித்தனியாகச் சந்தித்து பேச வேண்டியதில்லை என்றும் இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
0 Response to "ஜனாதிபதித் தேர்தல் குறித்து ததேகூ திங்களன்று மீண்டும் ஆராயும்"
แสดงความคิดเห็น