புவனேஸ்வரியின் அடேங்கப்பா அறிமுகம்!
மூவேந்தர் முன்னணி கழகத்தின் துணையுடன் பெண்களுக்காக முழுக்க முழுக்க பாடுபடுவேன் என்று மூவேந்தர் முன்னணி கழகத்தின் மாநில மகளிர் அணி செயலாளர் நடிகை புவனேஸ்வரி கூறியுள்ளார். மூவேந்தர் முன்னணி கழகத்தில் இணைந்த நடிகை புவனேஸ்வரியை கட்சிக்காரர்களுக்கு அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி இன்று சென்னையில் நடந்தது. விபச்சாரம் செய்தார் என போலீசாரால் கைது செய்யப்பட்டு, இப்போது ஜாமீனில் வெளியே இருக்கும் திரைப்பட மற்றும் டி.வி. நடிகை புவனேஸ்வரி மூவேந்தர் முன்னணி கழகத்தில், கட்சியின் தலைவர் டாக்டர் சேதுராமன் முன்னிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இணைந்தார். சென்னை தியாகராயநகரில் உள்ள அலுவலகத்தில் டாக்டர் சேதுராமனுக்கு அப்போது மாலை அணிவித்தார். நடிகை டி.புவனேஸ்வரிக்கு மூவேந்தர் முன்னணி கழகத்தின் மாநில மகளிர் அணி செயலாளராக பொறுப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து நடிகை புவனேஸ்வரியை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி இன்று சென்னையில் அமர்க்களமாக நடந்தது. வழக்கமாக இம்மாதிரி கூட்டங்களுக்கு தலைகாட்டாத பலர் ஆர்வத்துடன் வந்து, புவனேஸ்வரி வருகைக்காகக் காத்திருந்தனர். கூட்டம் துவங்கியதும் மூவேந்தர் முன்னணி கழகப் பொதுச்செயலாளர் இசக்கி முத்து நடிகை புவனேஸ்வரியை அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் புவனேஸ்வரி நிருபர்களுக்கு தந்த பேட்டி:
3வருடத்துக்கு முன்பே நான் இந்த கட்சியில் சேர்ந்திருக்க வேண்டும். சந்தர்ப்ப சூழ்நிலையால் சேரவில்லை. இப்போது அரசியலில் சேரும் நேரம் வந்ததால் இணைந்துள்ளேன்.
மூவேந்தர் முன்னணி கழகம் நான் சார்ந்த சமுதாய கட்சியாகும். டாக்டர் சேதுராமன் எனக்கு இந்த பொறுப்பை வழங்கியதால் கட்சி பணியில் தீவிரமாக செயல்படுவேன்.
கடந்த கால சம்பவம் பற்றி எதுவும் சொல்ல விரும்பவில்லை. அது விதியின் விளையாட்டு. போலீசார் எனக்கு பல்வேறு வகைகளில் நெருக்கடி கொடுத்தார்கள். அதை நான் சட்டரீதியாக சந்திப்பேன். என் மீது போடப்பட்ட வழக்கை சந்தித்து குற்றமற்றவர் என நிரூபிப்பேன்.
நான் கைது செய்யப்பட்டபோது வாக்குமூலம் எதுவும் கொடுக்கவில்லை. நான் சொன்னதாக வந்த அனைத்து தகவல்களும் தவறானது. நான் வாக்குமூலம் கொடுக்கவில்லை என்று போலீஸ் கமிஷனரே கூறி இருந்தார்.
நடிகர் சங்க தலைவர் சரத்குமாரை நேற்று சந்தித்து இது தொடர்பாக விளக்கம் தெரிவித்தேன். எனது விளக்கத்தை அவர் ஏற்றுக்கொண்டார். எந்த நடிகர்-நடிகை பற்றியும் நான் போலீசில் எதுவும் சொல்லவில்லை.
பத்திரிக்கையாளர்கள் எனது நண்பர்கள். பத்திரிக்கையாளர்களை பற்றி நான் எதுவும் தவறாக எங்கும் பேசுவது கிடையாது. யாரோ சிலர் பேசினார்கள் என்றால் அது அவர்களுக்குள் விஷயமாகும்.
நடிப்பு என் மூச்சு அதை நிறுத்த மாட்டேன். தற்போது அரசியலிலும் எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதால் இங்கும் பிரகாசிப்பேன்.
பெண்களுக்கு எதிராக அநீதி எங்கு நடந்தாலும் குரல் கொடுப்பேன். எதிர் காலத்தில் தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. கட்சித் தலைமை முடிவுப்படி செயல்படுவேன்.
திருச்செந்தூர், வந்தவாசி இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்ல முடியவில்லை. விரைவில் சென்னையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேச இருக்கிறேன்.
ஆளுங்கட்சிக்கு எதிராக எந்தப் போராட்டமும் நடத்தும் ‘ஐடியா’ இல்லை என்றார்.
0 Response to "புவனேஸ்வரியின் அடேங்கப்பா அறிமுகம்!"
แสดงความคิดเห็น