jkr

செய்தியறிக்கை


அயதுல்லா மொண்டசாரியின் இறுதி ஊர்வலம்
அயதுல்லா மொண்டசாரியின் இறுதி ஊர்வலம்

இரானில் அயதுல்லாவின் உடலடக்கத்தின் போது மோதல்கள்

இரானில் அரசுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டு வந்த மிகவும் செல்வாக்கு பெற்றிருந்த மூத்த மதகுருக்களில் ஒருவரான கிராண்ட் அயதுல்லா ஹொஸைன் மொண்டசாரியின் இறுதி நிகழ்வுகளில், நாட்டின் பாதுகாப்பு படையினருக்கும் எதிர்கட்சிகளின் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

புனித நகரமான குவாமில் இடம் பெற்ற அவரது நல்லடகத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

இரண்டு முக்கிய எதிர்கட்சித் தலைவர்களான மிர் ஹொஸைன் முசவியும், மெஹ்டி கரூபியும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

அவரது நல்லடக்கத்தின் போது, அங்கு அஞ்சலி செலுத்த வந்திருந்த்வர்கள் அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.

மொண்டசாரியின் இறுதி நிகழ்வுகளின் போது பாதுகாப்பு படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிகழ்வானது எதிகட்சியினரின் போராட்டங்களுக்கு ஒரு உந்துதலை அளித்துள்ளது என்றும், இந்த வாரத்தில் அது மேலும் பரவலாம் என்றும் டெஹ்ரானில் இருக்கும் பிபிசியின் செய்தியாளர் கூறுகிறார்.


"பாகிஸ்தானின் அதிபர் சில அதிகாரங்களை விட்டுக்கொடுக்க வேண்டும்":எதிர்கட்சிகள் கோரிக்கை

பாகிஸ்தான் அதிபர் ஜர்தாரி
பாகிஸ்தான் அதிபர் ஜர்தாரி
பாகிஸ்தானில் அதிபர் ஆசிஃப் அலி ஜர்தாரி தனது அதிகாரங்களில் சிலவற்றை விட்டுக் கொடுக்காவிட்டால் அங்கு அவர் போராட்டங்களை எதிர்கொள்ள நேரிடும் என்று முக்கிய எதிர்கட்சி எச்சரித்துள்ளது.

அரசியல் ஊழல் குற்றசாட்டுகள் தொடர்பில் அவருக்கும் எதிர்கட்சிகளுக்கும் இடையே மோதல் எழுந்துள்ளது.

ஆனாலும் சட்டவிரோதமான வகையில் ஜர்தாரி அவர்களையோ அல்லது அவரது அரசையோ பதவியிலிருந்து அகற்றும் எந்த நடவடிக்கையையும் தாங்கள் ஆதரிக்கப் போவதில்லை என்று பாகிஸ்தான் முஸ்லிம் லீக்(நவாஸ்) பிரிவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் பாகிஸ்தானின் உச்சநீதிமன்றம், ஊழல் வழக்குகளை எதிர்கொள்ளும் அரசியல்வாதிகளுக்கு பொது மன்னிப்பபு வழங்கும் ஒரு ஆணையை சட்டவிரோதமானது என்று அறிவித்தது.

பொது மன்னிப்பு வழங்கப்பட்டவர்களில் ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் மூத்த உறுப்பினர்களும் அடங்குவர். இதையடுத்து அங்கு அரசியல் அழுத்தங்கள் அதிகரித்துள்ளன.


கடன் பிரச்சினை தொடர்பில் துபாய் வேர்லட் நிறுவனம் பேச்சுவார்த்தை

துயாய் வேர்ல்டின் ஒரு வணிக வளாகம்
துபாய் வேர்ல்டின் ஒரு வணிக வளாகம்
துபாய் அரசாங்கத்துக்குச் சொந்தமான முதலீட்டு நிறுவனமான துபாய் வேர்ல்ட் நிறுவனம், தனது 20 பில்லியன் டாலர்கள் பெறுமதியான கடனை மாற்றியமைப்பது குறித்து தனக்கு கடன் வழங்கியவர்களுடன் பேச்சு நடத்துகின்றது.

தனது நிதி நிலைமை குறித்து துபாய் வேர்ல்ட் தனது வங்கிகளுக்கு விபரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

அந்தப் பிராந்திய பங்குச் சந்தைகளில் பெரும் அதிர்வை ஏற்படுத்திய நிகழ்வாக கருதப்படுகின்ற, தனது கடனைத் திருப்பித்தருவதற்கு தாமதமாகும் என்று துபாய் வேர்ல்ட் அறிவித்த நிகழ்வுக்குப் பின்னர் நடக்கின்ற முதலாவது சந்திப்பு இதுவாகும்.


கோபன்ஹேகன் மாநாடு குறித்து சில நாடுகள் மீது பிரிட்டன் குற்றஞ்சாட்டியுள்ளது

பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுண்
பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுண்
கோபன்ஹேகன் காலநிலை மாநாடு சில நாடுகளின் சிறிய குழு ஒன்றால் பணையம் வைத்து நெருக்கடிக்கு தள்ளப்பட்டுவிட்டது என்று பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுண் கூறியுள்ளார்.

கோபன்ஹேகனில் முக்கிய உடன்பாடு ஏற்படுவதை சீனா தடுத்துவிட்டது என்று அவரது அமைச்சர்களின் ஒருவரான எட் மிலிபாண்ட் குற்றஞ்சாட்டியிருந்தார்.

தனது பங்குக்கு சீனா, புவியை வெப்பமடையச் செய்யும் வாயுக்களை வெளியேற்றுவதை அதிகரிக்கச் செய்ய அனுமதித்ததாக அமெரிக்கா போன்ற செல்வந்த நாடுகளை குற்றஞ்சாட்டியுள்ளது.

நடைமுறைகள் குறித்த விவகாரங்களில் அதிக நேரம் வீணடிக்கப்பட்டதாக கூறுகிறார், இந்த மாநாட்டின் அதிகமான அமர்வுகளுக்கு தலைமை தாங்கிய டென்மார்க் நாட்டின் முன்னாள் காலநிலை அமைச்சரான கொன்னி கெடகார்ட்.

வாயுக்களின் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதில் எந்தவொரு நாடும் சரியான கரிசனை காட்டவில்லை என்று தான் ஏமாற்றமடைந்திருந்ததாகவும் அவர் கூறினார்.

செய்தியரங்கம்
விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளராகவிருந்த பா.நடேசன்
விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளராகவிருந்த பா.நடேசன்

இறுதிப் போரில் சரணடைந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர்கள் கொல்லப்பட்டமை தொடர்பில் ஐ.நா விளக்கம் கோரியுள்ளது

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப் போரின் போது சரணடைய முனைந்த அந்த அமைப்பின் தலைவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பில் எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து தம்மிடம் ஐக்கிய நாடுகள் அமைப்பு விளக்கம் கோரியுள்ளது என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

சட்டவிரோதமான கொலைகள் குறித்த ஐக்கிய நாடுகள் அமைப்பின் சிறப்பு பிரதிநிதி பிலிப் ஆல்ஸ்டன் முன்வைத்துள்ள வேண்டுகோள் குறித்து தாங்கள் ஆராய்ந்து வருவதாகக் கூறும் இலங்கை ஜனாதிபதியின் அலுவலகம், அது தொடர்பில் தேவைப்படும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதி ஜெனரல் சரத் ஃபொன்சேகாவை மேற்கோள் காட்டி முதல் முறையாக இந்தக் குற்றசாட்டுகளை இலங்கையிலிருந்து வெளியாகும் ஒரு நாளிதழ் ஞாயிறன்று செய்தி வெளியிட்டுருந்தது.

ஆனால் தான் வெளியிட்டிருந்த கருத்துக்கள் தவறாக புரிந்தது கொள்ளப்பட்டுள்ளன என்று இந்த செய்தி வெளியான பிறகு ஜெனரல் ஃபொன்சேகா தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில், இலங்கை மனித உரிமைகள் அமைச்சின் செயலாளர் ரஜீவ விஜேசிங்க தமிழோசைக்கு அளித்த செவ்வியை செய்தியரங்கத்தில் கேட்கலாம்.

இதேவேளை, விடுதலைப்புலிகளுக்கு சொந்தமான கப்பல் ஒன்று வெளிநாடொன்றிலிருந்து கைப்பற்றப்பட்டு இலங்கை துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பில் இலங்கை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணாயக்கார அளித்த செவ்வியையும் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


ஏ9 வீதியில் தனியார் போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் நீக்கம்

ஏ9 ஓமந்தை வீதித் தடை
ஏ9 ஓமந்தை வீதித் தடை
இலங்கையின் வடக்கே ஏ9 வீதியில் தனியார் வாகனப் போக்குவரத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடைகள் இன்று முதல் நீக்கப்பட்டுள்ளதாக வடபிரதேசத்திற்கான அபிவிருத்தித் திட்டத்தின் தலைவரும் ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகருமாகிய பசில் ராஜபக்ச அறிவித்திருக்கின்றார்.

பாதுகாப்பு அமைச்சின் முன் அனுமதி பெற்றே தனியார் வாகனங்கள் இந்த வீதியின் ஊடாகப் பயணங்களை மேற்கொண்டு வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

ஏ9 வீதியின் ஊடாகப் பொதுமக்கள் பேருந்துகளில் ஏற்கனவே பயணம் செய்து வருகின்றார்கள். பொதுமக்கள் இராணுவத்தின் அனுமதி பெறவேண்டும் என விதிக்கப்பட்டிருந்த தடை இப்போது நீக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து யாழ் குடாநாட்டு மக்கள் யாழ் பேரூந்து நிலையத்தில் பேரூந்துகளில் ஏறி, தென்பகுதிக்கான பிரயாணத்தை மேற்கொள்ளக் கூடியதாக இருக்கின்றது. இந்த நடைமுறை கடந்த வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கை போக்குவரத்துச் சபை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றார்கள்.

ஏ9 வீதியில் தனியார் வாகனங்கள் பிரயாணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டதையடுத்து, தனியார் பேரூந்துகளும் தற்போது சேவையில் ஈடுபட்டிருக்கின்றன.

எனினும் வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்குச் செல்கின்ற பொதுமக்கள் வவுனியா தேக்கவத்தையில் உள்ள இராணுவ சோதனைச்சாவடிக்குச் சென்று தமது ஆள் அடையாள அட்டையின் நிழல் பிரதிகள் இரண்டைக் கொடுத்து, இராணுவ அனுமதி பெற்ற பின்பே பிரயாணம் மேற்கொண்டு வருகின்றார்கள். இந்த நடைமுறையில் எந்தவிதமான மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.


இந்தியாவில் நிர்வாக வசதிக்காக மாநிலங்கள் பிரிக்கப்படுவதற்கு இடதுசாரிகள் எதிர்ப்பு

ஆந்திராவில் புதிய மாநிலம் தொடர்பான கலவரங்களின் போது
தெலுங்கானாவில் பொலிசார்
தென்னிந்திய மாநிலமான ஆந்திராவில் இருந்து தெலங்கானா என்கிற தனி மாநிலத்தை பிரிப்பதற்கு ஆதரவாக இந்திய நடுவணரசு கருத்து தெரிவித்ததை தொடர்ந்து இந்த விவகாரம் மேலும் சிக்கலை அதிகப்படுத்தியது.

தெலங்கானாவுக்கு எதிராகவும் ஆந்திராவில் சமீபத்தில் கடும் வன்முறைகள் மற்றும் அதை ஒட்டிய அரசியல் அதிரடி நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன.

இந்த பின்னணியில், இந்தியாவில் மொழிவாரியாக பிரிக்கப்பட்ட மாநிலங்கள் நிர்வாக வசதிக்காக சிறியமாநிலங்களாக பிரிக்கப்படுவதை இடதுசாரி கட்சிகள் எதிர்ப்பதாக அறிவித்துள்ளன.

இடதுசாரிகளின் இந்த நிலைப்பாடு ஏன் என்பது குறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மையக்குழு உறுப்பினர் டபிள்யூ ஆர் வரதராஜன் அவர்கள் அளித்த செவ்வியை செய்தியரங்கத்தில் கேட்கலாம்


கட்டக் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி

சச்சின் டென்டுல்கார்
சச்சின் டென்டுல்கார்
இந்திய இலங்கை அணிகளுக்கு இடையே கட்டக்கில் இடம்பெற்ற மூன்றாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இந்த வெற்றியுடன் ஐந்து போட்டிகளை கொண்ட இந்தத் தொடரில் இந்தியா 2-1 என்கிற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

கட்டக் போட்டியில் முதலில் ஆடிய இலங்கை அணி 44.2 ஓவர்களில் 239 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. இலங்கை அணியின் சார்பில் உபுல் தரங்க அதிகபட்சமாக 73 ஓட்டங்களை எடுத்தார்.

இந்திய அணியின் சார்பில் சச்சின் டெண்டுல்கர் 96 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்து தமது அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவினார். கட்டக் போட்டியில் அவர் அடித்த அரைசதத்துடன் இது வரை ஒரு நாள் போட்டிகளில் டெண்டூல்கர் 93 அரைசதங்களை அடித்துள்ளார்.

இந்த இரு அணிகளுக்கு இடையேயான நான்காவது ஒரு நாள் போட்டி எதிர்வரும் வியாழக்கிழமை கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "செய்தியறிக்கை"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates