இலங்கைக்கு அனைத்துக் கட்சி எம்.பிக்கள் குழுவை அனுப்ப வேண்டும்- வெங்கையா
சென்னை: இலங்கையில் உள்ள தமிழர்களின் நிலையை ஆராய அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த எம்.பிக்கள் குழுவை உடனடியாக அனுப்ப வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் வெங்கையா நாயுடு கோரியுள்ளார்.
சென்னை வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
இலங்கை தமிழர்கள் பிரச்சினையில் இந்திய அரசு சரியாக நடந்து கொள்ளவில்லை என்ற வருத்தமும், வேதனையும் இந்திய மக்களிடம் குறிப்பாக தமிழக மக்களிடம் உள்ளது.
இலங்கையில் உள்ள முகாம்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அதனை பார்வையிட அனைத்து கட்சி எம்.பி.க்கள் குழுவை இந்திய அரசு அனுப்பி, அவர்களது மறுவாழ்வுக்கு துரித நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
இலங்கை போரினால் பாதிக்கப்பட்டவர்களை அவர்களது சொந்த இடங்களுக்கு குடியமர்த்தும் பணிகள் மிகவும் மெதுவாக நடந்து வருகிறது.
ஜனாதிபதி வேட்பாளர் பொன்சேகா, தான் பதவி விலக காரணமாக கூறியுள்ள 16-ல் இதுவும் ஒன்று என கூறியுள்ளார். இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களின் உண்மையான நிலையை புரிந்துகொள்ள இந்திய அரசு தவறிவிட்டது.
விடுதலைப்புலிகள் கதை முடிந்திருக்கலாம், ஆனால் தமிழர்களின் பிரச்சினை முடியவில்லை. இலங்கை அரசு தமிழர்களை விரைவாக மறுகுடியமர்வு செய்யாவிட்டாலோ, அரசியல் ரீதியான தீர்வு காணாவிட்டாலோ அங்கு புதிய பிரச்சினைகள் தோன்றலாம்.
இலங்கைக்கு இந்திய அரசு அனைத்து கட்சி பிரதிநிதிகள் குழுவை விரைவில் அனுப்ப வேண்டும். இலங்கை தமிழர்கள் மறுகுடியமர்வுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை அளிக்கும் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும்.
இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்குவது குறித்து இறுதி முடிவெடுக்கும் முன் மாநில அளவிலும், மத்திய அளவிலும் கவனமாக, தீவிரமாக, விரிவாக விவாதிக்கப்பட வேண்டும்.
இலங்கைக்கு தமிழகத்தை சேர்ந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி எம்.பி.க்கள் குழு மட்டும் சென்றது, தவறல்ல. அவர்கள் திறமையால் தனிப்பட்ட முறையில் சென்றார்கள். ஆனால் இது மிகவும் முக்கியமான பிரச்சினை என்பதால் இந்திய அரசே அனைத்து கட்சி குழுவை அனுப்பியிருக்க வேண்டும் என்றார் நாயுடு.
0 Response to "இலங்கைக்கு அனைத்துக் கட்சி எம்.பிக்கள் குழுவை அனுப்ப வேண்டும்- வெங்கையா"
แสดงความคิดเห็น